கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள்

கணவன்திருமணம் செய்து கணவன் மனைவியாக இணைந்து கொள்பவர்கள் கடைசி வரை மிகவும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள்.

மணமக்களுக்காக வாழ்த்துகளை தெரிவிப்பவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். எனினும் பல்வேறு காரணங்களால் பல இல்லற தம்பதியர்களின் வாழ்க்கை சந்தோஷமாக அமைவதில்லை. இதற்கு முக்கிய காரணமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் அமைந்து விடுகின்றது.

இரவில் கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நானா, நீயா என்று முட்டி மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று எதனையும் கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னதமான உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு.

மகிழ்ச்சியுடன் கூடிய கணவன் மனைவியாக வாழ்க்கை வாழ இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அதுவே இந்தக் கட்டுரை.

திருமணம் செய்து சந்தோஷத்ம், நிம்மதியை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கும் அனுமதியில்லை.

“உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். ” (அல்குர்ஆன் 13:38)

“திருமணம் செய்வதற்கு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என நபி (ﷺ) அவர்களும் கட்டளையிட்டுள்ளார்கள்.

“இளைஞர்களே! தாம்பத்திய வாழ்வை நடத்த சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) கெட்ட பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பை பாதுகாக்கும். (அதற்கு) இயலாதவர்கள் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசை, இச்சையை) கட்டுப் படுத்தக் கூடியதாகும்” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (رضي الله عنه), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.)

மனிதனின் வாழ்க்கையில் மிக அவசியமும் முக்கியமுமான இத்திருமணத்தை வசதியில்லாத ஜோடிகளுக்கு வசதி படைத்தவர்கள் முடித்து வைக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

“உங்களில் வாழ்க்கைத் துணை அற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் முடித்து வையுங்கள்! அவர்கள் வசதியற்றவர்களாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.” (அல்குர்ஆன் 24:32)

மனிதனினது வாழ்க்கையில் அவசியம் தேவைப்படும் இந்தத் திருமண பந்தம், பெரும்பாலானவர்களது வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடித்து சில நாட்கள் அல்லது சில மாதங்களில் பெரும் பிரச்சனைகள், சச்சரவுகள் ஏற்பட்டு, அது தொடர்கதையாக மாறி விடுகின்றது. பலரது வாழ்க்கையே தொடர்பு அறுந்து அந்தரத்தில் தொங்குகின்றது.

மனித வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத மிக முக்கியமான இந்தத் திருமணம் ஏன் சில நாட்களில் கசக்கத் துவங்குகின்றது? இதற்குக் காரணம் தான் என்ன? இன்பமான வாழ்க்கை அமைவதற்கு என்ன வழி வகைகள் இருக்கின்றன? என்பன குறித்து மார்க்கம் என்ன சொல்கின்றது? என்று நாம் பார்ப்போம்.

இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் எனில் முதலில் முக்கியமான ஒரு அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் மனிதர்கள் என்ற வகையில் தவறு செய்பவர்களே! என்பதை மிக ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

எதிர் பார்த்த அளவிற்கு முழுமையாக, பரிபூரனமாக யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் அப்படியும் இப்படியுமாகத் தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நாம் எதிர் பார்த்த அளவிற்கு இருப்பது என்பது மிகக் கஷ்டம் தான்.

அவர்களிடம் பல குறைகள் நமக்கு தென்படலாம். அப்போது நாம் அவைகளை பொறுத்துக் கொண்டு அவர்களிடம் இருக்கும் மற்ற நற்பண்புகளை எண்ணி திருப்தி கொள்ள வேண்டும். அப்பெண்ணிடம் காணப்படும் சில குறைகள் கூட நமக்கு நன்மைகளை பெற்றுத் தரலாம்.

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)

தான் விரும்பியபடி, எதிர்பார்தபடி நடக்கவில்லை, என் விருப்பதிற்கு மாற்றமாக நடக்கின்றார் என்ற எண்ணம் தான் பெரும்பாலும் கணவன், மனைவியிடம் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. முதலில் இந்த எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட வேண்டும்.

திருமணம் வாழ்க்கை சிக்கலாக, பிரச்சினையுள்ளதாக அமைவதற்கு இன்னொரு காரணம் மணப்பெண்ணை மார்க்கத்தின் அடிப்படையில் தெரிவு செய்யாமல் பணத்தையும், செல்வாக்கையும் அழகையும் மட்டும் பார்த்து தேர்வு செய்வது தான்.

“நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகின்றாள்:

  • அவளது செல்வத்திற்காக
  • அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக
  • அவளது அழகிற்காக
  • அவளது மார்க்கத்திற்காக.

ஆகவே நீ மார்க்கம் உடைய பெண்னை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையெனில்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ-ஹுரைரா (رضي الله عنه), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.)
மார்க்கம் தெரிந்து, அதன் படி நடக்கக் கூடிய பெண்ணை மணப் பெண்ணாக தேர்வு செய்ய வேண்டும் என்ற நபி (ﷺ) அவர்களின் கட்டளை முழுமையாக புறக்கணிக்கப்படுவது இல்லற வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தக் காரணமாக அமைகின்றது.

கணவன், மனைவிக்கு மத்தியில் சிக்கல்கள், பிரச்சினைகள் ஏற்படும் போது, அவர்களைச் சேர்த்து வைக்கும் நல்ல நோக்கத்தில் அவர்களை அழைத்து, அவர்களிடம் மார்க்கம் கூறும் அறிவுரைகளைச் சொல்லும் போது, மார்க்கத்தைப் பற்றிய தெளிவும், அறிவும் இருந்தால் அந்த அறிவுரைகளை மதித்து சேர்ந்து வாழ முயற்சிப்பார்கள்.

மார்க்கத்தின் அடிப்படை விடயங்களே தெரியாதவர்களாக அந்தத் தம்பதி இருந்தால் அவர்கள் எப்படி மார்க்கத்தின் போதனைகளை செவி சாய்த்துக் கேட்பார்கள்?

எனவே மணமகளையோ, அல்லது மணமகனையோ தேர்வு செய்யும் போது இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களைப் பற்றித் தெரியுமா? தொழும் பழக்கம் இருக்கின்றதா? அல்-குர்ஆன் ஓதத் தெரியுமா? நற்பண்புகள், நல்லொழுக்கங்கள் இருக்கின்றதா? என்பதை முதலில் தெரிந்து அதற்கு முதலிடம் கொடுத்துத் தேர்வு செய்யுங்கள்.

“இவ்வுலகம் இன்பங்களாகும். இவ்வுலகின் இன்பங்களில் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (رضي الله عنه), நூல்: முஸ்லிம்

“அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய, அன்பு காட்டக் கூடியவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: மஃகல் பின் யஸார் (رضي الله عنه), நூல்: நஸயீ.)

“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்பவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக! என்ற இறை வசனம் இறங்கிய போது முஸ்லிம்கள் மத்தியில் அது பெரும் கவலையை ஏற்படுத்தியது.

அப்போது உமர் (رضي الله عنه) அவர்கள், ”நான் உங்கள் கவலையை நீக்குகின்றேன்” என்று கூறி விட்டு (நபி (ﷺ) யவர்களிடம்) சென்று ”அல்லாஹ்வின் தூதரே! தங்களது தோழர்களுக்கு இந்த வசனம் பெரும் கவலையை ஏற்படுத்தி விட்டது” என்று கூறினார்கள்.

அதற்கு நபி (ﷺ) அவர்கள், ”உங்களில் மீதமுள்ள செல்வங்களை, சொத்துக்களை தூய்மைப் படுத்துவதற்குத் தான் அல்லாஹ் உங்களுக்கு ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். வாரிசு உரிமையை உங்களுக்குப் பிறகு வருபவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளான்” என்று கூறினார்கள்.

அப்போது உமர் (رضي الله عنه) அவர்கள், ”அல்லாஹு அக்பர்” என்று கூறினார்கள். பின்னர் ”மனிதன் சேமிப்பதிலேயே சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்டு விட்டு ”கணவன் தன்னைப் பார்க்கும் போது மகிழ்ச்சியூட்டுவாள். அவன் கட்டளையிட்டால் அதற்கு கட்டுப்படுவாள். அவன் இல்லாத போது தன் கற்பைப் பாதுகாப்பாளே அப்படிப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்மணி” என்று நபி (ﷺ) அவர்கள் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (رضي الله عنه), நூல்: அபூதாவூத்.)

மே​லே கூறப்பட்ட நபிமொழிகளின் படி மணமக்களைத் தேர்வு செய்து இருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளைச் சரி செய்து விடலாம்.

கணவனின், மனைவியின் அன்பை பெறுவது எப்படி?. இல்லற வாழ்க்கை அமைதியாக இன்பமாக அமைவதற்கு மார்க்கம் சொல்லும் வழிமுறைகள் என்ன?

சிறு சிறு உதவிகளைச் செய்தல்

கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பும், புரிந்துணர்வும் அதிகரிக்க, மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது மனைவிக்குத் துணையாக இருந்து உதவ வேண்டும்.

காய்கறி நறுக்கும் போது, சமையல் செய்யும் போது இது போன்ற காரியங்களில் மனைவி ஈடுபடும் போது சிறு சிறு உதவிகளைச் செய்தால் கணவன் மீதான அன்பு மேலும் அதிகரிக்கும். நபி (ﷺ) அவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்து வந்துள்ளார்கள்.

“நான் ஆயிஷா (رضي الله عنها) அவர்களிடம், ”நபி (ﷺ) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (رضي الله عنها) அவர்கள், ”நபி (ﷺ) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகைக்கான அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்காக) புறப்பட்டு விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.” அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் நூல்: புகாரி.

“நபி (ﷺ) அவர்கள் தமது வீட்டில் வேலை செய்வார்களா?” என்று ஆயிஷா (رضي الله عنها) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ”அவர் தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தாமே தைப்பார்கள்; வீட்டில் ஆண்களால் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உர்வா நூல்: அஹ்மத். (அஹ்மதின் மற்றொரு அறிவிப்பில் ஆட்டின் பாலைக் கறப்பார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.)

நபி (ﷺ) அவர்கள் தம் வீட்டில் ஆண்களால் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தமது மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு பல அலுவல்கள் இருந்தும் தமது குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கியது அவர்களின் சிறந்த பண்பாட்டையும், முன்னுதாரணத்தையும் காட்டுகின்றது.

இறைத்தூதர் அவர்களே இவ்வாறு செய்து காட்டியிருந்தால் நாம் எந்தளவிற்கு நடக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் சிறு சிறு உதவிகள் கூட கணவன் மனைவிக்கு இடையில் அன்பையும் பாசத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்.

ஊட்டி விடுதல்

சாப்பிடும் போது தன் மனைவிக்கு ஒரு கவள உணவையாவது ஊட்டி விட்டால் கணவனின் மீது உள்ள அன்பை இன்னும் அதிகரிக்கச் செய்வதோடு இறையருளையும் பெற்றுத் தரும்.

“உன் மனைவியின் வாயில் ஊட்டி விடக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (رضي الله عنه), நூல்கள்: புகாரி, முஸ்லிம்.)

மாதவிடாய் நேரத்தில்…

மாதவிடாய் நேரத்தில் பெண்கள் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்று கூறி யூதர்கள் பெண்களை தனி அறையில் அடைத்து வைத்தனர்.

பொதுவாக இந்த மாதவிடாய்க் காலத்தில் அனைவரும் பெண்களை ஒதுக்கியே வைப்பார்கள். எனவே இதைப் போன்ற நேரங்களில் அவர்களிடம் அன்புடன், கணிவுடன் நடந்து கொண்டால் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

“யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே நபி (ﷺ) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபி (ﷺ) அவர்களிடம் கேட்டனர். அப்போது,

”நபியே! அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே மாதவிலக்குள்ள போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்” என்று தொடங்கும் (2:222வது) இறை வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து நபி (ﷺ) அவர்கள், ”தாம்பத்திய உறவைத் தவிர ஏனைய காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (رضي الله عنه), நூல்: முஸ்லிம்.)

மாதவிடாய் ஏற்பட்டுள்ள காலத்தில் உடலுறவைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களையும் செய்து கொள்ளலாம்.

அவர்களுடன் உறவாடுவது, அவர்கள் சமைத்த உணவை சாப்பிடுவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்யலாம். இதற்கு நபி (ﷺ) அவர்களே சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள்.

“நான் மாதவிடாயுடன் இருக்கும் காலத்தில் நபி (ﷺ) அவர்களின் தலை முடியை நான் சீவிவிடுவேன். (அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்: புகாரி)

“எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது எனது மடியில் சாய்ந்து கொண்டவாறு நபி (ﷺ) அவர்கள் குர்ஆனை ஓதும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர்.” (அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்: புகாரி.)

“நபி (ﷺ) அவர்கள் மஸ்ஜிதில் இஃதிகாப் இருக்கும் போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தமது தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் அவர்களது தலையைக் கழுவுவேன்.” (அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்: புகாரி.)

“எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் நான் (ஏதேனும் பானத்தை) குடித்து விட்டு அதை நபி (ﷺ) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்து குடித்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள்.

மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபி (ﷺ) அவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வைத்து சாப்பிடுவார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்: முஸ்லிம்.)

மற்றவர்கள் மாதவிடாய் என்று கூறி பெண்களை ஒதுக்கி வைக்கும் நேரத்தில் நபி (ﷺ) அவர்கள் தம் மனைவியரிடம் அனைத்து உதவிகளையும், ஒத்தாசைகளையும் பெற்று வந்துள்ளார்கள்.

மேலும் ஆயிஷா (رضي الله عنها) அவர்கள் தண்ணீரை வாய் வைத்துக் குடித்து விட்டுத் தரும் போது, ஆயிஷா (رضي الله عنها) அவர்கள் எந்த இடத்தில் வாய் வைத்து குடித்தார்கள் என்பதைக் கவனித்து, அதே இடத்தில் தமது வாயை வைத்து குடித்துள்ளார்கள்.

இறைச்சியைக் கொடுக்கும் போதும் ஆயிஷா (رضي الله عنها) அவர்கள் கடித்த அதே இடத்தில் இறைச்சியைக் கடித்து, மாதவிடாய் நேரத்தில் பெண்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

இந்த நேரம் மட்டுமல்ல! ஒரு பெண் கவலையுடன், சோர்வுடன் இருக்கும் போதும், தனக்கு உறுதுணையாக, ஒத்தாசையாக யாரும் இல்லை என்று அவள் எண்ணும் போதும் அவளிடம் கணவன் இது போன்று அன்புடன் நடந்து கொண்டால் நிச்சயம் கணவனிடம் மனைவி மதிப்பும் மரியாதையும் வைப்பாள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இல்லற வாழ்க்கை இனிக்க மார்க்கம் தடை செய்யாத விடயங்களில் மனைவியின் உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் மதிப்பளித்து அவர்கள் விரும்பியதைச் செயல் படுத்த வேண்டும்.

இவ்வாறு செயல் படுத்தும் போது அது அவர்களின் ஆசையை நிறைவேறுவதுடன் கணவன் மீதான மதிப்பும் மாரியாதையும் உயரும்.

உதாரணமாக ஏதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினால் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். முடியவில்லை என்றால் இன்னொரு நாளில் அழைத்துச் செல்வதாகக் கூறி அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்வதால் கணவன் மனைவி இடையேயான உறவு சீர்படும், சிறப்பாகும். நபி (ﷺ) அவர்கள் இவ்வாறே நடந்து கொண்டார்கள்.

ஒரு பெருநாள் தினத்தின் போது சூடான் நாட்டவர்கள் தமது போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள்.

நபி (ﷺ) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்கு அமையவோ, ”நீ அதை பார்க்க ஆசைப்படுகிறாயா?” எனக் கேட்டார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தார்கள்.

(பிறகு அவர்களை நோக்கி) ”அர்பிதாவின் மக்களே! உங்கள் விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ”உனக்கு போதுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். ”அப்படியானால் (உள்ளே) போ!” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்: புகாரி.)

நபி (ﷺ) அவர்கள் என்னைத் தமது மேல் ஆடையால் மறைத்துக் கொண்டிருக்க மஸ்ஜிதில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சலித்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது ஆர்வம் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! (அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்: புகாரி.)

அன்னை ஆயிஷா (رضي الله عنها) அவர்கள் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ﷺ) அவர்கள் தடையாக இருக்கவில்லை.மாறாக ஆயிஷா (رضي الله عنها) அவர்களுக்காகத் தாமும் அதனைப் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (رضي الله عنها) அவர்கள் போதும்! போதும்! என்று கூறும் அளவுக்குத் தன் தோளை விளையாட்டை பார்க்கும் சாதனமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள்.

இறைத் தூதராக இருந்த நபி (ﷺ) அவர்களுக்கு எத்தனையோ பணிகள், காரியங்கள் இருந்த போதும் மனைவியின் ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

“நான் (சிறுமியாக இருந்த போது) வீட்டில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர்களும் இருந்தனர். அவர்களும் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டவுடன் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.” (அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها) நூல்: புகாரி.)

ஆசையுடன் தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (رضي الله عنها) அவர்களை நபி (ﷺ) அவர்கள் கடிந்து கொள்ளவும் இல்லை, தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை அறிந்து அதை நிறைவேற்றும் வண்ணம் அவர்களின் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.

இதைப் போன்று மனைவி தன் தோழிகளைப் பார்ப்பதற்கு அவர்களுடன் பேசுவதற்கும் அனுமதி கேட்டால் கணவன்மார்கள் அனுமதியளிக்க வேண்டும். இன்று தன் பெற்றோர்களிடம் கூட பேசுவதற்கும் பார்ப்பதற்கும் அனுமதி கொடுக்க மறுக்கும் கணவன்மார்கள் நபி (ﷺ) அவர்களின் இந்த முன்மாதிரியை சிந்திக்க வேண்டும்.

விளையாடுதல்

திருமணமான கணவன் மனைவி அன்புடனும் பாசத்துடனும் இருப்பதற்கு, தாங்கள் அன்பை வெளிப்படுத்தும் வித்தில் சிரித்து விளையாடுவதற்கும் மார்க்கத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது,

“கன்னிப் பெண்ணை மணந்து கொண்டு, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி ஒன்றாக விளையாடலாமே! நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (رضي الله عنه), நூல்: புகாரி.)

மனைவி கணவனுடனும் கணவன் மனைவியுடனும் விளையாடுவதற்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் எவ்வித வயது வரம்பும் கிடையாது.

“நான் ஒரு பயணத்தில் நபி (ﷺ) அவர்களுடன் சென்றேன். அப்போது நான் இளம் வயதுப் பெண்ணாக இருந்தேன். எனக்கு சதை போட்டு உடல் பெரிதாக கனத்திருக்க வில்லை. அப்போது நபி (ﷺ) அவர்கள் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ”முந்தித் செல்லுங்கள்!” என்றார்கள். அவர்கள் பந்தயத்தில் முந்திச் சென்றார்கள். என்னைப் பார்த்து ”வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்” என்றார்கள். நான் பந்தயத்தில் அவர்களை முந்திச் சென்று (இறுதியில்) நானே முந்தினேன். நபி (ﷺ) அவர்கள் அமைதியானார்கள்.

எனக்கு சதை போட்டு நான் உடல் கனத்து விட்டேன். (ஓட்டப் பந்தயம் விடயத்தையும்) நான் மறந்து விட்டேன். இன்னொரு முறை நான் அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போதும் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ”முந்தித் செல்லுங்கள்!” என்றார்கள். அவர்களும் முந்திச் சென்றார்கள்.

பின்னர் என்னைப் பார்த்து ”வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்” என்றார்கள். நான் அவர்களுடன் பந்தயத்தில் ஓடினேன். (இறுதியில்) என்னை நபி (ﷺ) அவர்கள் முந்தி விட்டார்கள். சிரித்துக் கொண்டு ”அதற்கு இது சரியாகி விட்டது” என்றார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (رضي الله عنها), நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.)

எந்தப் பயணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்ற விபரம் இல்லை. எனினும் குறைந்த பட்சம் நபி (ﷺ) அவர்களின் வயது என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். நபி (ﷺ) அவர்கள் அன்னை ஆயிஷா (رضي الله عنها) அவர்களுடன் கலந்து கொண்ட பயணங்கள் மதீனா வாழ்க்கையின் போது தான் நடந்துள்ளது.

நபி (ﷺ) அவர்கள் மதீனாவிற்குப் போகும் போது அவர்களது வயது 53. மதீனா சென்றவுடனே இந்த நிகழ்ச்சி நடந்திருந்தாலும் அவர்களின் வயது 53 ஆக தான் இருக்க வேண்டும்.

நபி (ﷺ) அவர்களின் வயது (குறைந்த பட்சம்) 53 ஆக இருக்கும் போது தன் மனைவியிடம் ஓட்டப் பந்தயம் வைத்து அதில் தோற்றுப் போய், பல வருடங்கள் கழிந்த பின்னரும் அதை நினைவில் வைத்து வெற்றிக் கொண்டது, மனைவியிடம் கணவன் வயது வரம்பின்றி அவ்வப்போது இது போன்று விளையாடி மகிழ்விக்கலாம் என்பதை மிகத் தெளிவாகப் பறை சாற்றுகின்றது.

இவ்வாறு நடப்பதும் நடந்து கொள்வதும் கணவன், மனைவியிடம் அன்பை அதிகரிக்க உதவும் என்பதை அறியலாம்.

– ஜஸாகல்லாஹு ஹைரன் –
ரெஹனா பானு மாஸ்கோ


Sarinigar Main Logo, About Us, Contact Us, Privacy PolicyX

Leave a Reply

error: Content is protected !!